Sunday, February 26, 2017

மயான கொள்ளை - மேல்மலையனூர்


மயான கொள்ளை,,காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி 

 பெரும்பாலும் அங்காளம்மன் அல்லது அங்காளபரமேஸ்வரி வழிபாடு  கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, ஆற்காடு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படும் ஒரு வழிபாட்டுச் சடங்கே மயான கொள்ளை ஆகும். இதற்கு, மயானத்தில் நிகழ்த்தப்படும் கொள்ளைஎன்று பொருள்படும். ஆனால், “கொள்ளைஎன்பது திருட்டுஎன்ற  அர்த்தம் கொள்ளாமல் தீயதை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுவதாய பொருள் கொள்ள வேண்டும்.


மாசி மகாசிவராத்திரி அன்று நண்பகலில் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றிரவு  இறந்த பிணங்களின் சாம்பல், மண் ஆகியவற்றால் 3 அல்லது 4 மீட்டர் நீளமுள்ள அம்மன் (பார்வதி) படுத்திருப்பது போல் உருவமொன்று அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்து, இரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர். காலையில் பூசாரி பதினாறு கைகள் கொண்ட அம்மனை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஏற்றுவர். காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள்.



 குறிப்பிட்ட குலத்தை சார்ந்த ஆண் ஒருவருக்கு புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, அனைத்து ஆபரணங்களும் சூட்டி, நீண்ட முடியுடன் அம்மனாய் உருவகப்படுத்துவார்கள்.  அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரலை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலி, பூசை, ஊர்வலம், முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கள் வீடு, கழனிகளில் விளைந்த காய்கறிகளை வீசுவர்.. உடல்நிலை சரியில்லாத போது வேண்டிக்கொண்டதற்கிணங்க பாதிக்கப்பட்டு சீரான உடல் பாகங்களின் உருவங்களை அரிசி மாவில் செய்து வீசுவர். குழந்தை வேண்டி வரம் பெற்றவர்கள் குழந்தை உருவம் செய்து வீசுவர். அதை முந்தானையில் பிடித்து குழந்த வரம் வேண்டுவோர் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் உருவாக்கியிருக்கும் அம்மன் மீதிருக்கும் மஞ்சள், குங்குமம். சாம்பல், மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது.



அப்போது எடுக்கப்படும் மண், மஞ்சள், குங்குமம் சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தது  அதனை நிலத்தில் புதைத்தால் நல்ல விளைச்சல் உண்டாகும். அதனை பூசாரி திருநீறு போல் மக்களுக்கு வழங்குவர்.மயான கொள்ளைநிகழ்ச்சியின் போது பம்பைகாரர்கள் பாடல் இசைப்பார்கள். 



கேரளத்திலும், கேரளத்தையொட்டிய குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்த்தப்படும் அம்மன் கோயில்களில் களமொத்தும் பாட்டும்என்ற நிகழ்ச்சி மயான கொள்ளையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. களமொத்து பாட்டு அம்மன் உருவத்தைத் தரையில் வரைந்து வண்ணம் தீட்டி பாடல் பாடியும் களச்சித்திரம் அழிக்கப்படும்.குமரி மாவட்டத்தில் நாயர் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சி நம்பூதிரி அல்லது பிராமணரால் பூசை செய்யப்படுகிறது. நம்பூதிரிதான் தரைச்சித்திரத்தை அழிப்பார். கால் பகுதியிலிருந்து சித்திரம் அழிக்கப்படுகிறது. மார்புப் பகுதியில் இருக்கும் அரிசி திருமலை பிரசாதம்என நம்பப்படுகிறது.



இந்த அரிசியில் ஒன்றிரண்டை கஞ்சி வைத்து குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்குப் பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. சிதைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொடிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பேய், பிசாசுகளை விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.மயான கொள்ளை நிகழ்த்துதலில் காளி, அங்காளம்மன், காட்டேரி, பேய்ச்சி போன்ற பல வேடங்கள் போடப்படுகின்றன. வேடம் ஏற்பவர் பம்பை இசைக்கேற்ப ஆடுகிறார். பம்பைகாரர்கள் பாடும் பாடலும், ஆடலும் சிறப்பிடம் பெறும். ஆயினும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மயான கொள்ளை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சடங்குகளாக நிகழ்த்தப்படுகின்றன.


வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது, தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க யாகத்துக்கு வந்த தாட்சாயனி, தந்தையை சமாதானப்படுத்த முடியாமல்...  சிவனுக்கு தன் உயிரையே அவிர்பாகமாய் அளிக்க,  யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள்.

அம்பிகையின் உயிரற்ற  உடலைத் தூக்கிக்கொண்டு ஈரேழுலகத்தையும் சுற்றி வந்ததை காண சகியாத மகா விஷ்ணு தன் சுதர்ஷண சக்கரத்தை ஏவி தாட்சாயணி உடலை துண்டாடினார். அப்படி  அறுந்து விழுந்த அம்பிகையின் உடல் பாகங்கள் ச்கதி பீடங்களாய் முளைத்தன. துண்டாய் விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர்.அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.



Mayana Kollai Celebration in Tiruvannamalai

இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய  சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிச்சை இட்டு அந்த பிச்சைய ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிச்சை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.



அன்னையானவள் சுவை மிகுந்த உணவை தயாரித்து சிவனுக்கு பிச்சை இடத்தயரானாள். முதல் கவளத்தை சிவனின் கையிலிருந்த மண்டை ஓடு உண்டது. இரண்டாவது கவளத்தை வேண்டுமென்றே தவறவிட்டாள் அன்னை. உணவின் ருசியால் ஈர்க்கப்பட்ட மண்டை ஓடு உணவை சுவைக்க வேண்டி சிவனின் கையிலிருந்து நழுவியது..  மீண்டும் அக்கபாலம் இறைவனின் கைகளில் ஏறாமல் இருக்க அன்னையானவள் தன் கையிலிருந்த மிச்ச உணவை வானை நோக்கி இறைத்தாள்.  கபாலமும் உணவுக்காக வான் நோக்கி சென்றது.  அப்படி வான் நோக்கி பறந்த கபாலத்தை விஸ்வரூபமெடுத்து தன் கால்களால் பூமியில் அழுத்திகொண்டாள்.

அப்படி சிவனின் பிரம்மஹத்தி தோசம் நீங்கிய நாள் மாசி மாத அமாவாசை தினம். அதன் நினைவாகவே இன்றும் மயான கொள்ளை நடத்தப்படுது. சிவன் கையிலிருந்து கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடிதாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.


மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன்னுடைய பூரண வலுவோடும்பலத்தோடும் இருப்பாள். .இப்படி பட்ட சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மிகவும் முக்கியமான ஒரு விசேஷம் மயான கொள்ளை. மாசி அமாவாசையில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை ஒரு தனி சிறப்பு.  மேல்மலையனுரில் பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது இந்த மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு (ஒரு பக்தர் இவ்விதம் அலங்கரிக்கப்படுவார்) கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.




ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவிவிக்க விஸ்வரூபமெடுத்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்திபடுத்தவே எலுமிச்சை மாலையும், வேப்பிலை மாலை, உடையை சார்த்தியும், ஒவ்வொரு  அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடியும் அம்மனை சாந்தப்படுத்தகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காணவரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது..

நாமும் இந்த அங்காளபரமேஸ்வரி , அம்மனுடைய அருளை பெறுவோம்..

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்....
நன்றியுடன்,

ராஜி 

6 comments:

  1. அறியாதன பல அறிந்தேன்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வேலூர்லயும் மயான கொள்ளை வெகு விமர்சையாய் கொண்டாடுவாங்களேண்ணே.

      Delete
  2. இந்த தகவல்கள் எல்லாம் எங்கிருந்து திரட்டுகிறீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. செவி வழி கதைகள், புத்தகம், தொலைக்காட்சி, அப்புறம் கூகுள்.

      Delete
  3. பயனுள்ள தகவல்!

    ReplyDelete